மயிலாடுதுறை: மகாலட்சுமி துர்கா தேவி ஆலயத்தில் சிறப்பு குத்துவிளக்கு பூஜை
மயிலாடுதுறை அருகே கருவாழைக்கரை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட தசபுஜ மகாலட்சுமி துர்கா தேவி ஆலயத்தில் ஆடி மாதத்தின் 4-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது.காவிரி வடக்குப் பகுதியில் உள்ள மகா சதா சிவ பீட வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம், 18 கைகளுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீ மகாலட்சுமி துர்கா தேவிக்காக அமைக்கப்பட்டுள்ளது. உலக நலன், நோய் நொடிகள் நீங்குதல் மற்றும் பில்லி சூனியம் உள்ளிட்ட தீய பாதிப்புகள் விலக வேண்டி இந்த சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.அஷ்ட தசபுஜ பீடாதிபதி சுவாமிநாதன் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணிகண்ட சிவாச்சாரியார் சிறப்பு பூஜைகளை மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து சிவபுரம் வேத பாடசாலை மாணவர்கள் வேத பாராயணம் செய்தனர்.பின்னர் சுமார் 180 சுமங்கலி பெண்கள் குத்துவிளக்குகளை ஏற்றி சிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு தாலிக்கயிறு, குங்குமம், வளையல்கள், ஜாக்கெட் துணி, பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.மேலும், பக்தர்களுக்காக அன்னதானமும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மகாலட்சுமி துர்கா தேவியை தரிசனம் செய்து வழிபட்டனர்.